Saturday, December 6, 2008

கணிப்பொறியாளனும், கமாண்டோவும்!

அந்நிய நாடு
அள்ளிக்கொடுத்தது
உன்
ஒவ்வொரு சிந்தனைக்கும்!

அறிவு கொடுத்த
அன்னை பாரதம்
குருதிக் கண்ணீர்
வடிக்கிறது!
என்ன செய்ய
இயலும்
உன்னால்??

உயிராய் வளர்த்த
என் அம்மா!
உறவுக்குப் பொருளாய்
என் தங்கை!
ஒரு நொடி
நினைவாயினும்
உயிர் இரையாகும்!
எதிரியின் தோட்டாவுக்கு!

உதிரம் உறைய
உன்னை
துப்பாக்கி ஏந்தி
துணைக்கு அழைக்கவில்லை!

இத்தனை கற்றும்
அன்பான
மனைவியை
அடித்துக்கொன்ற
உன்னால்,
எனக்கு
சப்பாத்தி
சுடக்கூட
தெரியாது
எனத் தெரியும்!

இரவு பகல்
பாராது
எந்திரமாய்
எல்லையில்
நான் நிற்க!

பகலை இரவாக்கி
பாவை நடனம்
உனக்கு!!

லட்சியமாய்
வாழும்
பெரியவரிடம்
உனக்கு அலட்சியம்!

பாழாய் போன
பாரதம், உன்னால்
பத்து பைசா
பலனில்லை எனினும்
பரணில்
வைத்துப் பார்ப்பதை
தான் பொறுக்க முடியவில்லை!

எனக்கு
கால் மேல் கால்
போட்டு
கணிப்பொறி
இயக்கத் தெரியாது!

அம்பு தெறித்த
வில்லாய்
அண்டி வந்த
அநீதியை
நெஞ்சு கீறி
கொல்ல இயலும்!

உனக்கிருப்பது
போலத் தான்
எனக்கும்!
உயிரும்,உறவும்!

தடுக்கி விழும்
தளர்ந்தவர்களையாவது
தூக்கி விடு!
எதிர்த்து வரும்
எதிரிகளை
நாங்கள்
பார்த்துக் கொள்கிறோம்!

சமர்ப்பணம்: என் தாய் நாட்டுக்காக உதிரம் சிந்திய சகோதரர்களுக்கு
நான் சிந்தும் ஒரு சொட்டு 'மை' சமர்ப்பணம்..

அன்புடன்
மாரிமுத்து..